Thursday 7 February 2013

 
பதவி, புகழளிக்கும் பைரவ தரிசனம்!குலதெய்வ கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செலுத்த முடியாதவர்களை, ஏதேனும் காரணத்தினால் தீர்த்த யாத்திரை, விரதம் போன்ற அனுஷ்டானங்களை கடைபிடிக்க முடியாதவர்களை, பித்ருக்களுக்கு உரிய நீத்தார் கடனை நிறைவேற்ற இயலாதவர்களை சில தோஷங்கள் பீடிக்கும் என்பார்கள். இதற்குப் பரிகாரமாக சித்தர்கள் சில வழிமுறைகளை நாடியில் கூறியுள்ளனர். அந்த வகையில், அகத்தியர், ‘‘சிதைந்திட்ட சிரார் தமது பெரும் பிணியீயுமப்பா & பிண்டமதனை காலத்தீயாது விடின் வரும் வாட்டம் வம்சத்தையும் அழிக்குமாதலின் ஆதிச் சிவனவன் பைரவ வடிவேந்தி விளங்க யவரை யுரிய காலத்திலாராதித்து விமோசனங் காண்பீரே’’ என்கிறார்.

பித்ரு தோஷத்தைப் போக்கவல்லது பைரவர் வழிபாடு என்று சொன்ன அகத்தியர் அந்த பைரவர் கோயில் கொண்டிருக்கும் தலங்களையும் விவரிக்கிறார். ‘‘அஞ்சருவிச் சலத்தருகு யடுத்தே வரகலூராம் & காரையான் பட்டியிலுமே நின்ற சோழ மண்டலத்துக் கோட்டைச் செங்கனூராம் முழு மண்டலமே. தோணியப்பனருள் கொண்ட விக்கிரமனும் சுங்காஸ்தமனத்தில் வந்திருந்து அருள் செய்ய சித்தங் கண்டோமே. ஈலுக்குடிவடம் பின்னே சட்டநாதனை கண்டோமே: குறுங்குடி பைரவனை அயனுந்தொழப் பார்த்தோமிது சத்தியமே’’ என்கிறார்.

இப்பாடலின் பொருள்: குற்றாலத்தில் குடி இருப்பவர் கால பைரவர். ஆறகழூரில் அஷ்ட பைரவர்கள். காரைக்குடியில் பைரவர். சோழ புரத்தில் பைரவச்சேசுவரர். அதியமான் கோட்டையில் கால பைரவர். திருச்செங்கோட்டில் பைரவ நாத மூர்த்தி, இலுப்பை குடியில் பைரவ மூர்த்தி, குண்டடத்தில் கொங்கு வடுகநாதன், சீர்காழியில் சட்டநாதர் என்று பக்தர்களுக்கு அருள்பரிபாலிக்கிறார் பைரவ மூர்த்தி. திருக்குறுங்குடி பைரவரை விஷ்ணுவும் பிரம்மனும் இந்திரனும் மற்றும் நவகோள் நாயகர்களும் பூஜித்து வருகின்றனர். அனுதினமும் & கலியுகம் முற்றும் காலம் வரையிலும் வாயுபகவான் இந்த திருக்குறுங்குடி பைரவரை உபாசனை செய்து வருவார் என்கிறது சித்தர் வாக்கு.

வெள்ளிக்கிழமை இரவு பைரவரை தொழுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் சீர்காழியில், ஆடி வெள்ளி இரவு பைரவரை தொழுதால் பில்லி, சூனிய, ஏவல் பாதிப்புகள் அகலும்; தீராத பிணி போகும் என்கிறார் சிவவாக்கியர்.

‘‘கடக மஸ்தமன பொழுததனிலே சுங்கனிருக்க பைரவனை & விக்ரமனை & சட்டமுனியை கை தொழுதக்கால் ஏவலுஞ்சுன்யமும் விலக காணீரே & பெருஞ்செல்வஞ் சேரப்பாரீரே & தீராப் பிணி மடிய நிற்பீரே & மடிந்தார் தமக்காற்று திதிபிண்ட தோஷமுமொருசேர நீங்கி நீடு வாழ்வீரே யல்லால் நீத்தார் தாமுந் நல்லாசி யீவாரே’’ என்கிறார்.
பைரவ பூஜை மகத்தானது. மகிமை வாய்ந்தது. பெரிய பதவிகளையும் புகழையும் அளிக்கவல்லது. செவ்வரளி அல்லது சிவப்பு நிற பூக்களினால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களில் பைரவரை ஆராதனை செய்வதும் பைரவருக்குப் பிடித்த கோதுமை பாயசம் படைத்து, வினியோகம் செய்வதும், இழந்த பொருளை மீட்டுத்தரும் என்கிறது அகத்தியர் நாடி.‘‘போன பொருள் கை கூடும். பகையான உறவும் நட்பாகும். ஆபரணமொடு பேரானந்தமுஞ் சேருமப் பானு வஸ்தமனப்போது பாயஸன்னம் நாட் பண்டத்து படைப்போர்க்கே’’ 


நன்றி !  ஆன்மீகக்கடல்

No comments:

Post a Comment