Sunday 10 February 2013

அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் கால பைரவர் வழிபாடு

பிரபஞ்சத்தில் சகல ஜீவராசிகளும் வானமண்டலத்தில் உள்ள சூரியன் முதலான கிரகங்களும் நட்சத்திரங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே. காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் காலபைரவர் ஆவார். காலத்தின் கட்டுப் பாட்டை மீறி நன்மை செய்பவரும் இவரே. காலச்சக்கரத்தினால் துன்புறும் பக்தர்களை காப்பாற்றுவதால் ஆபதுத்தாரண பைரவர் என்று போற்றப்படுகின்றார்.

ஆபதுத்தாரணர் - என்றால் பக்தர்களின் துன்பத்தை அடியோடு அழிப்பவர் என்றும் பொருள்படும். இவரே மகாகாலர், சட்டநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். பைரவர் என்ற பதத்திற்கு பயத்தை போக்குகிறவர் என்றும் பயத்தை அளிப்பவர் என்றும் பொருள். பைரவரின் பீஜமந்திரங்கள், காயத்ரி, தியானம், மந்திரங்கள், அஷ்டடோத்தரம், சகஸ்நாமம் ஆகிய யாவும் பைரவரின் அருளை விரைவில் கொடுப்பவனாக அமைகின்றன.

குறிப்பாக சகஸ்ரநாமத்தால் கிடைக்கப்பெறும் பயன்கள் சிலவற்றை இங்கு தருகிறோம். ஆபத்து காலங்களிலும் எதிரிகளால் நாட்டிற்கு யுத்தபயம் ஏற்படும் போதிலும், கொடிய விலங்குகளினால் துன்பம் நேரும்போதும், நவக்கிரகங்களின் பெயர்ச்சியினால் (சுழற்சியால்) பக்தர்களுக்கு துன்பம் நேரிடும் போதும், வால்நட்சத்திரங்களாலும், எரிநட்சத்திரங்களாலும், ஆபத்து ஏற்படும் காலங்களிலும் திருடர்களால் தொல்லைகள் ஏற்படும்போதும் பைரவருக்கு இந்த சகஸ்ர நாம அர்ச்சனை செய்வதால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும்.

சந்தான பாக்கியம் பெற (குழந்தை).......


குழந்தை பாக்கியம் இல்லாத கணவன்-மனைவியர் ஆறு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிகப்பு அரளியால் இந்த பைரவ சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதால் விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும்.

இழந்த பொருள்களையும் சொத்துக்களையும் திரும்பப்பெற........

பைரவர் திருமேனியின் முன்னாள் மிளகை சிறுதுணியில் சிறுமூட்டையாக கட்டி அகல்விளக்கில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால் இழந்த பொருளும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும். வளர்பிறை அஷ்டமியில் சதுர்கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 ஒரு ரூபாய் காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை அலுவலகம் அல்லது வீடுகளில் பணப்பெட்டியில் வைத்து பூஜித்து வந்தால் செல்வம் குறையாது. செழிக்கும் தினமும் காலையில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவாய நமக என்று ஜெபிப்பது நன்மை பயக்கும்.

இழந்த பொருள், சொத்தை மீண்டும் பெற்றிட.........

நல்லெண்ணெய் ஊற்றி அகல்விளக்கில் மிளகை சிறு மூட்டையாக கட்டி வைத்து 27 நாள் தீபம் ஏற்றிட இழந்த பொருள், சொத்து மீண்டும் கிடைக்கும்.

ஏழரையாண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, சனீசுவரனால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்க........
சூரியன் மகனாக சனீசுவரன் தன்னுடைய அண்ணன் யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு, கவுரவக் குறைவை அடைந்தார். அவருடைய தாய் சாயா தேவியின் அறிவுரையின்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப்பதவி கிடைக்கப்பெற்றார். பைரவர் சனீசுவரனுக்கு குருவாக விளங்கி அருள் பாலிக்கின்றார்.

பைரவர்க்கு சனிக்கிழமைகளில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதால் சனீசுவரரும் மகிழ்ச்சியடைந்து ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமத்துச் சனி முதலிய சனிக்கிரக உபாதைகளை முழுவதையும் நீக்குவதுடன் நல்ல யோகமான பலன்களையும் அருள்கிறார்.

சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க........


சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கிணால், சனி பகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கம்.

தடை பெற்ற திருமணம் நடக்கவும்,எதிரிகள் தொல்லை நீங்கவும்.........


ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல்அகலும், திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும். இவ்வளவு பெருமைகளையும் அருட்திறனும் கொண்டு விளங்கும் பைரவரை சிவாலயங்களிலும் தனி ஆலயங்களிலும் கண்டுவழிபடலாம்.

அஷ்டமி திதியும், பைரவர் வழிபாடும்.......
அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் ஐஸ்வர்யம், சுகம், பொன் பொருளையும் தருகின்றார். காரணம் அஷ்டமி திதியில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்கி பைரவரின் அருளால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அஷ்டலட்சுமிகள் அருள் புரிவதால் நாமும் அஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலையில் இருந்து விரதமிருந்து ஒருவேளை உணவு உண்டு பைரவருக்கு நம்மால் முடிந்தவரை பூஜை செய்திட நினைத்தது எல்லாம் நடக்கும்.

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு......

இவர் அமர்ந்த நிலையில் தன் மடியில் பைரவியை அமர்த்திக் கொண்டு ஒரு கரத்தில் அமுத கலசமும், ஒரு கரத்தில் சூலமும் கொண்டு வைர கிரீடமும் பட்டு வஸ்திரமும் அணிந்து தம்பதி சமேதராக காட்சி தருகின்றார். இவரை அஷ்டமி திதி மற்றும் பவுர்ணமி நாளில், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வணங்கினால் சகல சம்பத்தும், பொன் பொருளும் கிட்டும். ஸ்ரீபைரவருக்குப் பவுர்ணமிக்குப் பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.

இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு.....


வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள் செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.

தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்ராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.

இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம். நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள். தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.

ஸ்வர்ணகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள். பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும்.

இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

சித்திரை - பரணி, ஐப்பசி - பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம்கால பைரவருக்கு விசேஷ நாள்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நடசத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமாகும். பலனும் அதிகம் கிடைக்கும்.

தை மாதம் செவ்வாய்க் கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும். பைரவர் விரதம்: எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் எதுவுமில்லை.

குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி பைரவரை மனதில் நினைத்து வணங்கவேண்டும். பகலில் இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.

No comments:

Post a Comment